புதன், 20 ஏப்ரல், 2011

புனே போராட்டம் : மும்பை முன்னேற்றம்

| | Leave a Comment
ஐபிஎல் போட்டிகளில் மும்பை-புனே இடையே நடந்த போட்டி மிக எளிதாக மும்பை அணிக்கு சாதகமாகும் என்று பார்த்தால், புனே அணி ஆட்டத்தின் பின் பகுதியில் திறமை காட்டி போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நீளச் செய்தனர்.

நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. முர்டாசா முதல் ஓவரை வீசினர். அவரின்  ரன் எடுக்க முடியாதபடியான பந்துகளால் சிரமப்பட்ட புனே அணி 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நெச்சிம்,முனாப் அடுத்தடுத்து புனே வீரர்களை அவுட் ஆக்கி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
சச்சின் பின்புறமாக நகர்ந்து கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை தொடக்கி வைத்தார்.

கேப்டன் யுவராஜ் சிங் அவுட் ஆனதும் கிட்டத்தட்ட உத்தப்பாவே கதி என்ற நிலைக்கு புனே போனது. சைமண்ட்ஸ் ஒருவேளை அடுத்த ஓவரில் தனது கீழாக ஸ்டம்பை நோக்கி அடித்த (Under Arm) பந்தை துல்லியப்படுத்தி இருந்தால், புனே 100 ரன்கள் எடுப்பதே சிரமம் ஆகி இருக்கும்.

முர்டசா, மலிங்கா சேர்ந்து உத்தப்பாவுக்கு நல்ல இணை யாரும் அமையாமல் பார்த்து கொண்டனர். ஆனாலும் உத்தப்பா சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் அதிகபட்ச தனி நபர் ஓட்டங்களும் அது தான்.

இறுதியில் வெறும் 119 ரன்களை இலக்காக நிர்ணயித்து புனே தன் ஆட்டத்தை முடித்து கொண்டது. பின்னர் ஆடத் தொடங்கிய மும்பை அணியின் பிராங்க்ளின் விரைவாக ஆட்டம் இழக்க நம்பிக்கை ஜோடி சச்சின்-ராயுடு சேர்ந்தனர். ஆட்டம் ஏதோ 50 ஓவர் போட்டியின் நடுப்பகுதியை போல் போய்க் கொண்டிருந்தது.

புனேவும் தனது களத்தடுப்பாளார்களை மைதானம் முழுக்க சிதற விட்டு விக்கெட்டுகள் எடுக்க முனையாது ரன்களை கட்டுப்படுத்த நினைத்தது. மும்பை அணியும் விரைவாக ரன் குவிக்க ஆசைப்படாமல் மெதுவாக ஸ்கோரை உயர்த்தியது.

சச்சின் 35 ரன்களும், ராயுடு 39 ரன்களும் எடுத்தனர். இருவருமே இடை இடையே தங்களுக்கு கிடைக்கும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். சச்சின் ஒருமுறை தனது Exclusive ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்க அது ராயுடு கையில் பட்டது, உடனே ஆறுதல் சொல்லி உதவ வந்தார் முரளி கார்த்திக். ஆனால் அடுத்த ஓவரில் லெக் சைடில் தூக்கி அடிக்க முனைந்து பந்தை தவறவிட்டு வயிற்றில் வாங்கி கொண்ட ராயுடு மீண்டும் கார்த்திக்கிடம் அனுதாபம் பெற்று, பின் இருவரும் பேசி சிரித்தது, அப்பாடா.. ஐபிஎல் இந்திய வீரர்களை விரோதிகளாக மாற்றவில்லை என பெருமூச்சு விடச் செய்தது.

சச்சின், ராயுடு அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆக, புனே சுதாரித்து ஆட்டத்தில் எதாவது செய்து தம் பக்கம் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்தது. சச்சின் விக்கெட்டை எடுத்த ராகுல் சர்மாவை பார்த்த போது அவர் எந்தளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் என நம்மாலும ஊகிக்க முடிந்தது.

ஆனால் சைமண்ட்ஸ், ரோஹித் சர்மா  சேர்ந்து அவசரம் காட்டாமல் கடைசி வரை பொறுமையாக விளையாடினர்.கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய  முரளி கார்த்திக் கையில் சரியாக பந்து வந்திருந்தால் சைமண்ட்ஸ் ரன் அவுட் ஆகி இருப்பார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற போது, 2008 ஐபிஎல் லில் யுவராஜ் விளையாடிய பஞ்சாப் அணி கடைசி பந்தில் மும்பையை தோல்வி அடைய செய்தது நினைவிற்கு திரும்பினாலும், ரோஹித் சர்மா கடைசியில் சிக்ஸ் அடித்து வெற்றியை கொண்டாட தொடங்கினார். ( எனக்கே தெரியாம அஞ்சு 'கடைசி' வந்துருச்சுங்க)

மூன்று விக்கெட் எடுத்த முனாப் படேல் ஆட்ட நாயகன் ஆனார்.


பதிவு பிடித்திருப்பின் ஓட்டு போடுங்கள்.. 




0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக