வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நல்ல நடிகன் என்பவன் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் சமீதிய இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் தந்த விளக்கம்.

"திரையில் மட்டும் நடிப்பவன்! மற்றும் தான் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டது போன்ற உணர்வைப் பார்ப்பவர்களுக்குத் தோற்றுவித்து, தன்னைச் சிறிதும் இழக்காமல் இருப்பவன். சாதனை செய்த மற்ற நல்ல நடிகர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துபோகாமல், வலியச் சென்று அவனைப் பாராட்டி, தன்னைத்தானே திறமையில் உயர்த்திக்கொள்ள நினைப்பவன்"

இந்த வரையறைக்கு கட்டுப்படும் தமிழ் நடிகர்களில் பலரும் இவரின் பட்டறையில் இருந்து உருவானவர்களே.
சூப்பர் ஸ்டார் முதல் உலக நாயகன் வரை தமிழ்த் திரை உலகின் உச்சாணியில் இருக்கும் பலரும் இவரிடம் குட்டுப்பட்டு உந்துதல் அடைந்தவர்கள் தாம்.
பொதுவாகவே பலரும் பிறரின் திறமைகளை பார்த்து பூரிப்பை விட பொறாமை தான் அதிகம் கொள்வர். ஆனால் யார் யாருக்குள் என்ன திறமை ஒளிந்து இருக்கிறது என்பது தனது அசாத்திய திறமையால் அடையாளங்கண்டு உலகிற்கே அதை வெளிக்கொணர்ந்து காட்டியவர் தான் கே.பி.


திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே விருதின் மேல் அவ்வளவு நாட்டம் இருப்பதில்லை. விருதுகளும் அவர்களை அவ்வளவு எளிதில் அணுகுவதில்லை.
ஆனால் தாதா சாகிப் பால்கே விருது நீர்க்குமிழியில் தொடங்கி தமிழ்த் திரை உலகை எதார்த்தத்தின் பால் திருப்பிய இவருக்கு இவ்வளவு காலஞ்சென்று கிடைத்திருப்பது திறமைக்கு என்றாவது ஒருநாள் மரியாதை உண்டு என்பதையே காட்டுகிறது.

அபூர்வ ராகங்கள்,அவள் ஒரு தொடர்கதை,தில்லு முள்ளு,கல்கி,பாமா விஜயம் ,புது புது அர்த்தங்கள்,புன்னகை மன்னன்,சிந்து பைரவி  என்று இவர் தொட்டது அத்தனையும் வித்தியாசமான   காலங்களுகேற்ற  வித்தியாசமான களங்கள்.
அத்தனை திரைபடங்களையும் ரசிகர்கள் புரிந்தும் ரசித்தும் விட்டது ஏதோ இவரின் அதிர்ஷ்டத்தால் அல்ல,திறமையால்.

தான் வைரங்களை உருவாக்குகிறோம் என்பதால் தலைக்கணம் கொண்டு எந்நாளும் இருந்ததில்லை பாலச்சந்தர், அதனாலேயே அவரால் புதிது புதிதாய் திரைக் கலைஞர்களை உருவாக்க முடிந்தது.

பாலச்சந்தர் தன் சிஷ்ய பிள்ளைகளிடம் எவ்வளவு அன்புடன் இருக்கிறார் என்பதற்கு கீழ்காணும் ரஜினி பேட்டி ஒரு சாட்சி.

கேபி- ரஜினி நேர்காணல் (1985):

பாலசந்தர்: நான் உன்னை நடிக்க வைத்த போதெல்லாம், நீ அமைதியில்லாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் அமைதியாக வேலை செய்பவனாக, கடவுள் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்கும் இந்த மாறுதல் ஏற்பட எப்படி முடிந்தது?

ரஜினி: பத்து வருஷத்துக்கு முன்பாக ‘பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களா வாங்கணும்’ என்ற ஆசை நிறைய இருந்தது. மனுஷன் சந்தோஷமா, நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை. இதெல்லாம் இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியாதுன்னு நம்பி இருந்தேன். அப்போது பணம் எனக்கு ரொம்பத் தேவைப்பட்டது.


இதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ நிச்சயமாக பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாள்தனம். இதெல்லாம் அதிகமாக வரவர சிக்கல்களும், பிரச்சினைகளும் ஜாஸ்தியாயிகிட்டே இருக்கும்.


சுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் நம்ம மனசுக்குள்ளேயே இருக்கு. இதெல்லாம் கிடைக்கிறதுக்கு ஆண்டவனோட அருள் வேணும்.


பணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அதைப் பொருட்படுத்தாம நடிக்கிறதுதான் என்னோட கடமைன்னு தீர்மானிச்சேன். தவிர, பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சேர்க்கலை. அது தனி, இது தனி.

பாலசந்தர்: புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் மக்களிடையே புகழ் பெற்ற தேசியத் தலைவர்கள் அதிகமில்லாத சமயத்தில். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

ரஜினி: நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.


அரசியலை சாக்கடை என்று சொல்வார்கள். நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.


அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக்கொண்டு “இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்” என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக் கூடாது.

பாலசந்தர்: என்றாவது ஒரு நாம் அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் உனக்குத் தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதைக் கேட்டபின்பு, நீயும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம் கூட. உடனடியாக இல்லாவிட்டாலும், அமிதாப்பைப் போல சில ஆண்டுகம் கழித்து அரசியலுக்கு வரலாம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?

ரஜினி: என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த தைவிட உங்களுக்கு நிறையவே தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் என்றும், அதற்கான அறிவு, தகுதி, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கம் நம்பினால் அதற்கு நான் நிறைய கொடுத்து வச்சிருக்கணும்.


பாலசந்தர்: வன்முறை சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறாயே? நீ வன்முறையில் நம்பிக்கை உள்ளவனா என்ன? சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறாய்?

ரஜினி: எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. நான் வன்முறையாளனும் அல்ல. வன்முறை சம்பந்தப்பட்ட படங்களில் என்னை நடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திரும்ப நான் பணம் வாங்கித் தரவேண்டும். அவர்கள் நடிக்க வைக்கிறார்கள், நான் நடிக்கிறேன்.


சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறைக்கெல்லாம் காரணம் “நாம் அனைவரும் இந்தியர்கள்” என்ற உணர்வு நம்மிடையே குறைந்து வருவதினால்தான்.

பாலசந்தர்: அபூர்வ ராகங்கம் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

பாலசந்தர்: ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

பாலசந்தர்: ‘உனக்கு நடிப்பே வராது’ என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?


இவருக்கு ஒரு சின்ன வாழ்த்து சொல்வது தான் என்னால் முடியும்.
வேறு என் செய்வேன் நான்?

புதன், 7 செப்டம்பர், 2011

இந்தியா,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,வளரும் நாடுகளில் பொருளாதார பலம் பொருந்திய நாடு, ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆகப்போகும் நாடு...

போதும் நிறுத்தும் ஓய் உம்ம பெனாத்தல.. இங்க பக்கத்துல எங்கேயோ குண்டு வெச்சி இருக்காளாம்..வெடிக்கப் போவுதாம்.. நாழி ஆறது சீக்கிரம் ஓடுங்கோல்...

அமைதிக்கு ஆண்டவன் உருவாக்கிய நாடு என்று எவரேனும் இந்தியாவை இனி சொன்னால் அமைதியின் பொருள் அகராதியில் மாறி விட்டதா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

எந்த தற்காப்பு கலையை எடுத்துக் கொண்டாலும்,எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் முதலில் அவன் தலையை தாக்க வேண்டும் என்பது என் போன்றவருக்கே தெரிந்திருக்கும் பொது நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இந்தியாவிற்கு இரண்டு தலைகள் உள்ளன.
ஒன்று வணிக தலைநகரம் மும்பை,
மற்றது ஆட்சி தலைநகரம் டெல்லி.

எத்தனை தலை இருந்தால் என்ன,அத்தனையும் அசைத்து பார்க்கும் அளவுக்கு பலவீனமான நாடு தானே? என்னும் அளவிற்கு இந்தியா மோசமாகிப் போனதை நினைக்கும் போது வருத்தப்படுவதா,கோபப்படுவதா என்று புரியவில்லை.
கோபப்படுவது என்றால் யார் மீது,
பொறுப்பில்லாத போலீஸ் மீதா,
அக்கறை இல்லாத அரசாங்கம் மீதா,
திருந்தாத தீவிரவாதிகள் மீதா,
எதையும் பொருட்படுத்தாத எம் மீதேவா?


ஆனால் ஒன்று உறுதி, இனி வருத்தப்பட்டோ கோபப்பட்டோ எந்த பயனும் இல்லை. சென்ற உயிர் மீளப் போவதும் இல்லை. பிரிந்த உடல் பாகங்கள் இணையப் போவதும் இல்லை.
ஆனாலும் இந்த விவகாரத்தில் வருந்த வேண்டியதை விட திருந்த வேண்டியது அவசியம் என்பதை நீங்களும் நானும்,அரசன் முதல் ஆண்டி வரை உணர வேண்டும்.

எப்படி ஒரு திரைப்படம் நன்றாக இருக்க ஹீரோ முதல் அடி பொடிகள் வரை திறம்பட செயல்பட வேண்டுமோ அது மாதிரி தான் தீவிரவாதத்தை தீர்க்க வேண்டுமாயின் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் அதற்கு எதிராக திரும்ப வேண்டும்.

இதில் சகிக்க முடியாத விஷயம் என்னவென்றால்,
எங்கு எப்போது இந்த மாதிரி சம்பவம் நடந்தாலும்,

அரசாங்க அதிகாரிகள்-போலீஸ் : சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இனிமேல் இது போன்றவை நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும்,

ஆட்சியாளர்கள் : குண்டுவெடிப்புக்கு உள்ளான பகுதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட நாட்டு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அணி மேலும் அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. என்றும்,

அரசியல்வாதிகள்  மருத்துவமனைக்கு செய்தி அலைவரிசைக்காரர்களை கூடவே அழைத்து சென்று ஆறுதல் சொல்வதும்,
தொலைகாட்சி நிறுவனங்கள் இல்லாதது பொல்லாததை எல்லாம் திரித்து விடுவதும்,
எதிர் கட்சிகள் பிரதமர்,உள்துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதும்,
ஆளுங்கட்சி இது போன்ற சம்பவங்கள் முந்தைய ஆட்சியிலும் நடந்ததாக பழையதை கிளறுவதும்,
வாடிக்கையாகி பொய் விட்டன.
இதெல்லாம் ஏதோ டெம்ப்லேட்கணக்காய் வைத்து இருக்கிறார்கள்.

டெல்லி உயர் நீதி மன்றத்திற்கு அருகில் வெடித்திருக்கும் இந்த குண்டுகள் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி.
இந்தியா என்பது ஏதோ அந்நிய தேசம் இல்லை; நாம் வாழும் நாடு.
நம் உடலின் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டால் மற்றது துடிப்பதை போல நமக்கு ஒரு நாளும் இது குறித்து எந்த ஒரு உணர்வும் வந்ததில்லை இது போன்ற விஷயங்களிலே.
இந்நிலை மாறும் வரை இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும்.
நீ எப்படி மற்றவர் என்று ஒதுங்குகிறாயோ அப்படி தான் உன்னை மற்றவரும் ஒதுக்குவர் என்பதை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு ஒழிப்போம் இந்த தீவிரவாத அசுரனை.

"எல்லாம் சரி அஜித்தின் மங்காத்தா நன்னாருக்கே இன்னோ... நாளைக்கு காலம்பர ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிடட்டா..."


செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும்.


அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் சச்சின் டெண்டுல்கரை ஒரு மாவட்ட அளவிலான அணியில் கூட இடம் கிடைக்காதவன் அறிமுகம் செய்து வைப்பது போலாகி விடும். அதனால் அந்த மாதிரி பாவம் எதையும் புரியும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை.

நேராக கொடுக்க வந்ததை கொடுத்து விட்டு பின்பு கதை அளக்கிறேன்.
சுஜாதாவின் நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிக்க இயலாதவர்கள் பின்வரும் பக்கத்திற்கு சென்று அவரின் சில ஆக்கங்களை பதிவிறக்கி கொள்ளலாம்.

சுஜாதா மின்னூல்கள்

மீண்டும் பிறிதொரு ஒரு நாள் ஒரு கோப்புறையில் சந்திக்கிறேன்...

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.
உலக சாம்பியன்,டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 என்று கம்பீரமாய் இங்கிலாந்து மண்ணில் விளையாட சென்ற இந்திய அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.
எனக்கு என்னவோ நாளை தான் இந்த தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி நிகழப் போவதாகப் படுகிறது பார்ப்போம்.

டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் T20 போட்டியில் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் தங்களது T20 வரலாற்றில் முதல் போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்களை தவிர்த்து எவருமே பெரிதாய் வெற்றிக்கு முனையவில்லை.

அந்த இருவர் யார் என்று இரண்டு தினங்களாக தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காண்பித்து இருப்பார்களே? ரஹானேவும் ராகுலும் தான்.
ஒருவர் கிரிக்கெட்வாழ்க்கையை தொடங்குகிறார். மற்றவர் முடிக்கப் போகிறார்.
இருவருமே சிறப்பாக விளையாடினர். ரஹானே சரியாக பந்தின் திசை,வேகம் ஆகியவற்றை கொண்டு திருப்பி விடுவதில் வல்லவராக படுகிறார். டிராவிட் தன் இயல்புக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஷாட்களை எல்லாம் அடித்தார். மூன்று தொடர்ச்சியான சிக்சர்களை டிராவிட் பேட்டில்இருந்து காண்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

சரி இவர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்களே, கோலி,ரோஹித் எல்லாம் பயிற்சி ஆட்டங்களிலே நன்றாக விளையடினர்களே ஸ்கோர் எங்கேயோ போய் விடும் என்று பார்த்தால் மீண்டும் மொத பேரும் ரெய்னா தவிர பொத்தென விழுந்து இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியை பரிசளித்து விட்டார்கள்.

நாளைக்கு எல்லாம் மாறும்; இந்திய அணி உத்வேகம் கொண்டு எழும் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்று நம்புவோம். அதை விட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்?

இதற்கு இடையில் T20 போட்டியின் போது வர்ணனை செய்யும் போது நாசர் உசைன் இந்திய களத்தடுப்பு வீரர் ஒருவரை கழுதை என்று வர்ணித்து விட்டதால் பிரச்னை கிளம்பி இருக்கிறது. அவர் திட்டியதை இவர்களே பெரிதாக்கி உலகுக்கு காண்பித்து விட்டார்கள்.

இது இப்படி என்றால் இந்திய அணியின் தோல்விக்கு வழக்கமாக யாராவது பலிகடா ஆக்கப்படுவார்கள் அல்லவா? இந்த முறை ஸ்ரீகாந்த் ஆகி இருக்கிறார். மோசமான அணித்தேர்வு எனக் கூறி அவர் பதவிக் காலத்திற்கு முற்றுப் புள்ளியை உறுதி செய்து இருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன.

இவர் தேர்வுக் குழு தலைவர் ஆன பிறகு தான் இந்திய அணி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் அரங்கில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது என்பதை மறந்து விட்டார்கள். ஏன் உலக கோப்பை போட்டிகளுக்கும் இவர் தானே அணித்தேர்வை செய்தார்.

சரி விடுங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இது ஒன்றும் புதிது அல்லவே?


புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு