வெள்ளி, 9 செப்டம்பர், 2011

திறமைக்கு மரியாதை.. எதார்த்தத்தின் எல்லைக்கல்

| | 3 comments
நல்ல நடிகன் என்பவன் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் சமீதிய இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் தந்த விளக்கம்.

"திரையில் மட்டும் நடிப்பவன்! மற்றும் தான் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டது போன்ற உணர்வைப் பார்ப்பவர்களுக்குத் தோற்றுவித்து, தன்னைச் சிறிதும் இழக்காமல் இருப்பவன். சாதனை செய்த மற்ற நல்ல நடிகர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துபோகாமல், வலியச் சென்று அவனைப் பாராட்டி, தன்னைத்தானே திறமையில் உயர்த்திக்கொள்ள நினைப்பவன்"

இந்த வரையறைக்கு கட்டுப்படும் தமிழ் நடிகர்களில் பலரும் இவரின் பட்டறையில் இருந்து உருவானவர்களே.
சூப்பர் ஸ்டார் முதல் உலக நாயகன் வரை தமிழ்த் திரை உலகின் உச்சாணியில் இருக்கும் பலரும் இவரிடம் குட்டுப்பட்டு உந்துதல் அடைந்தவர்கள் தாம்.
பொதுவாகவே பலரும் பிறரின் திறமைகளை பார்த்து பூரிப்பை விட பொறாமை தான் அதிகம் கொள்வர். ஆனால் யார் யாருக்குள் என்ன திறமை ஒளிந்து இருக்கிறது என்பது தனது அசாத்திய திறமையால் அடையாளங்கண்டு உலகிற்கே அதை வெளிக்கொணர்ந்து காட்டியவர் தான் கே.பி.


திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே விருதின் மேல் அவ்வளவு நாட்டம் இருப்பதில்லை. விருதுகளும் அவர்களை அவ்வளவு எளிதில் அணுகுவதில்லை.
ஆனால் தாதா சாகிப் பால்கே விருது நீர்க்குமிழியில் தொடங்கி தமிழ்த் திரை உலகை எதார்த்தத்தின் பால் திருப்பிய இவருக்கு இவ்வளவு காலஞ்சென்று கிடைத்திருப்பது திறமைக்கு என்றாவது ஒருநாள் மரியாதை உண்டு என்பதையே காட்டுகிறது.

அபூர்வ ராகங்கள்,அவள் ஒரு தொடர்கதை,தில்லு முள்ளு,கல்கி,பாமா விஜயம் ,புது புது அர்த்தங்கள்,புன்னகை மன்னன்,சிந்து பைரவி  என்று இவர் தொட்டது அத்தனையும் வித்தியாசமான   காலங்களுகேற்ற  வித்தியாசமான களங்கள்.
அத்தனை திரைபடங்களையும் ரசிகர்கள் புரிந்தும் ரசித்தும் விட்டது ஏதோ இவரின் அதிர்ஷ்டத்தால் அல்ல,திறமையால்.

தான் வைரங்களை உருவாக்குகிறோம் என்பதால் தலைக்கணம் கொண்டு எந்நாளும் இருந்ததில்லை பாலச்சந்தர், அதனாலேயே அவரால் புதிது புதிதாய் திரைக் கலைஞர்களை உருவாக்க முடிந்தது.

பாலச்சந்தர் தன் சிஷ்ய பிள்ளைகளிடம் எவ்வளவு அன்புடன் இருக்கிறார் என்பதற்கு கீழ்காணும் ரஜினி பேட்டி ஒரு சாட்சி.

கேபி- ரஜினி நேர்காணல் (1985):

பாலசந்தர்: நான் உன்னை நடிக்க வைத்த போதெல்லாம், நீ அமைதியில்லாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் அமைதியாக வேலை செய்பவனாக, கடவுள் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்கும் இந்த மாறுதல் ஏற்பட எப்படி முடிந்தது?

ரஜினி: பத்து வருஷத்துக்கு முன்பாக ‘பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களா வாங்கணும்’ என்ற ஆசை நிறைய இருந்தது. மனுஷன் சந்தோஷமா, நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை. இதெல்லாம் இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியாதுன்னு நம்பி இருந்தேன். அப்போது பணம் எனக்கு ரொம்பத் தேவைப்பட்டது.


இதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ நிச்சயமாக பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாள்தனம். இதெல்லாம் அதிகமாக வரவர சிக்கல்களும், பிரச்சினைகளும் ஜாஸ்தியாயிகிட்டே இருக்கும்.


சுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் நம்ம மனசுக்குள்ளேயே இருக்கு. இதெல்லாம் கிடைக்கிறதுக்கு ஆண்டவனோட அருள் வேணும்.


பணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அதைப் பொருட்படுத்தாம நடிக்கிறதுதான் என்னோட கடமைன்னு தீர்மானிச்சேன். தவிர, பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சேர்க்கலை. அது தனி, இது தனி.

பாலசந்தர்: புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் மக்களிடையே புகழ் பெற்ற தேசியத் தலைவர்கள் அதிகமில்லாத சமயத்தில். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

ரஜினி: நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.


அரசியலை சாக்கடை என்று சொல்வார்கள். நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.


அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக்கொண்டு “இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்” என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக் கூடாது.

பாலசந்தர்: என்றாவது ஒரு நாம் அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் உனக்குத் தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதைக் கேட்டபின்பு, நீயும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம் கூட. உடனடியாக இல்லாவிட்டாலும், அமிதாப்பைப் போல சில ஆண்டுகம் கழித்து அரசியலுக்கு வரலாம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?

ரஜினி: என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த தைவிட உங்களுக்கு நிறையவே தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் என்றும், அதற்கான அறிவு, தகுதி, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கம் நம்பினால் அதற்கு நான் நிறைய கொடுத்து வச்சிருக்கணும்.


பாலசந்தர்: வன்முறை சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறாயே? நீ வன்முறையில் நம்பிக்கை உள்ளவனா என்ன? சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறாய்?

ரஜினி: எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. நான் வன்முறையாளனும் அல்ல. வன்முறை சம்பந்தப்பட்ட படங்களில் என்னை நடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திரும்ப நான் பணம் வாங்கித் தரவேண்டும். அவர்கள் நடிக்க வைக்கிறார்கள், நான் நடிக்கிறேன்.


சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறைக்கெல்லாம் காரணம் “நாம் அனைவரும் இந்தியர்கள்” என்ற உணர்வு நம்மிடையே குறைந்து வருவதினால்தான்.

பாலசந்தர்: அபூர்வ ராகங்கம் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

பாலசந்தர்: ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

பாலசந்தர்: ‘உனக்கு நடிப்பே வராது’ என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?


இவருக்கு ஒரு சின்ன வாழ்த்து சொல்வது தான் என்னால் முடியும்.
வேறு என் செய்வேன் நான்?

3 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. பாலச்சந்தர் செதுக்கிய வைரங்கள் அத்தனையும் இன்றும் மினுமினுப்பாய் ஒளிருகின்றன.great பாலச்சந்தரிற்கு ஒரு great பதிவு

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...