இறுதிப் போட்டியில் சென்னை – பெங்களூர் உடன் சூப்பர் வெற்றி

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே சென்னை தோற்று விடும் என்றிருக்க பதினோரு பேர் மட்டும், சென்னை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்,அவர்கள் மஞ்ச சட்டை போட்ட சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள்.
கிட்டத்தட்ட தோற்று விடும் என்ற நிலையில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களை 59 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

பெங்களூர் முதலில் பேட்டிங் :

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். நிச்சயம் அது கெய்ல்-ஓ-போபியா வால் தான். முதலில் போல்லின்கர் மற்றும் மார்க்கல் பந்து வீசினர்.
கெய்ல் அடிக்க ஆரம்பிக்கும் முன்னே அகர்வால் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். ஆனால், அஸ்வின் பந்து வீச வந்ததுமே சென்னைக்கு ஒரு விக்கெட் உறுதி என தெரிந்தது, கெய்ல்  அஸ்வின் பந்தை சிக்சருக்கு விரட்ட, அடுத்த பந்திலேயே கெய்லை பெவிலியனுக்கு விரட்டினார் அஸ்வின்.

சென்னை அணி வீரர்கள் பெறும் நிம்மதி உடன் அடுத்தடுத்த ஓவர்களை வீசினர். ஏ பி டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து பயமுறுத்தினாலும் அதே ஓவரில் அவுட் ஆகி நிம்மதி அளித்தார். போமேர்ஸ்சர்ச் என்பவர் கொஞ்ச நேரம் ரன் மழை பொழிய, பெங்களுருக்கு ரன்கள் ஏறிக் கொண்டே இருந்தது.

கோலி சீரான ஆட்டம் :

இதற்கெல்லாம் இடையில் விராட் கோலி மட்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தபடி இருந்தார்.
போல்லின்கர் வீசிய 17வது ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது, முதலில் ஒரு அற்புதமான கேட்ச் முயற்சி செய்து தவறவிட்ட அவர், பின்பு போல்டு ஆக்கி பேட்ஸ்மேனை வெளியேற்றினார்.

அடுத்த ஓவரை வீசிய அஸ்வின் கடைசி பந்தில் திவாரி அடித்த ஷாட் தலையில் பட்டு, வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். கோலி ஐம்பது ரன்களை ஒரு பவுண்டரி அடித்து தொட்ட பின்பு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து கலக்கினார்.

கடைசி ஓவரில் பெங்களூர் அதிக ரன்கள் அடிக்காததால் சென்னைக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் ஆனது.

ஜாகிர் துல்லியம் :

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. ஜாகிர் கான் மைகேல் ஹசியை ரன் கணக்கை தொடங்கும் முன்பே அவுட் ஆக்கினார். சென்னையின் ப்ரீமியர் பேட்ஸ்மேன் அவுட் ஆன நிலையில், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இந்த ஐபிஎல் போட்டிகளில் மோசமாக விளையாடி கொண்டிருக்கும் முரளி விஜயும் அவுட் ஆனார்.

பின்னர் எப்போதுமே நம்பத்தகுந்த வகையில் விளையாடக்கூடிய ரெய்னாவும்,பத்ரினாத்தும் இணைந்தனர். இந்த இணை ரன் விகிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொண்டிருந்தது, விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டியது முக்கியம் என்பதால் இவ்வாறு விளையாடிய இவர்கள், ஆறு ஓவர்கள் முடிவில் வெறும் 25 ரன்களை மட்டுமே சென்னை அணியை கடக்க வைத்து இருந்தனர்.

ஐந்தாவது ஓவரின் முதல் நான்கு பந்துகள் டாட் ஆக கடைசி இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் ரெய்னா.

பத்ரிநாத் அவுட் ஆனதும் பொறுமை காட்டி வந்த சென்னை வேகமாக ரன் குவிக்க தொடங்கியது.

இடை இடையே கெய்ல் பந்து வீசி ரன் விகிதத்தை ஏறாமல் பார்த்துக் கொண்டார். அவரின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது, ரெயினாவுக்கு நேராகவும், தோனிக்கு விலகியும் பந்து வீசி ரன்களை மட்டுப் படுத்தினார் அவர். 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார் அவர் , போட்டியின் குறைந்த ரன் விகிதத்தை கொண்ட பந்து வீச்சாளர் அவரே.

44 பந்துகளில்  89 ரன்கள், முடியுமா?

அதிக ரன்கள் அடிக்கப்பட வேண்டும், குறைந்த ஓவர்களே உள்ளன. சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் விளையாடுகின்றனர். போட்டி நல்ல விறுவிறுப்பு அடைந்து இருந்தது.

மிதுன் வீசிய 13வது ஓவர் தான் சென்னைக்கு வெற்றி நம்பிக்கையைக் கொடுத்தது. அவர் அந்த ஓவரில் 23 ரன்களை கொடுத்தார்.

முதலில் சிறப்பாக பந்து வீசிய ஜாகிர் கடைசியில் சொதப்ப சென்னையின் வாய்ப்புகள் அதிகரித்தன. அவர் தோனியின் விக்கெட்டை எடுத்த போதிலும் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை வழங்கினார்.

இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்றிருந்தது ஒரு ஓவரில் 12 என்ற நிலைமைக்கு மாறியது. மார்க்கல் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர் அடித்து சென்னையின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்தார்.

கடைசி ஓவரை வெட்டோரி வீச, முதல் பந்தில் சின்கிள் எடுத்தார் ரெய்னா அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியும் பின்னர் அற்புதமான ரன்னிங் மூலம் இரண்டு ரன் எடுத்தும் மார்க்கல் களத்தில் நிற்க நான்காவது பந்தை சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மார்க்கல்.

ரெய்னா தான் எவ்வளவு நம்பகமான மட்டை வீச்சாளர் என்பதை இந்திய அணிக்கு எப்படி முக்கிய கட்டங்களில் நிரூபித்தரோ அதே போல் இப்போதும் 50 பந்துகளில் 73 ரன் சேர்த்து அணிக்கு வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் மும்பை கொல்கத்தாவை சந்திக்கிறது….